14 Sept 2022

அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள்தொடர்பான கள விஜயம்.

SHARE

  (நூருல் ஹுதா உமர்)

அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள்தொடர்பான கள விஜயம்.  

அட்டாளைச்சேனை பல நோக்குகூட்டுறவுச் சங்கம் எவ்வித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இன்றி பல வருடங்கள் இயங்கி வந்துள்ளது. இங்கு ஏற்பட்ட ஊழல், மோசடிகள் மற்றும் முறையற்ற நிருவாகத் திறன் என்பனவற்றை மையப்படுத்தி கிழக்கு மாகாண ஆளுநர், கூட்டுறவு ஆணையாளர் ஆகியோருக்கு பலரும் முறைப்பாடு செய்திருந்தனர். இதனால் விசாரணை குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகின்ற போதிலும் தற்காலிக பணிப்பாளர் சபையினை ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய ஆணையாளர் நியமிப்புச் செய்து இயங்கு நிலைக்கு கொண்டுவர ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் அட்டாளைச்சேனை கடற்கரையை அண்டி நிர்மாணிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் நிலையம் நிர்மாணிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை   இயக்கமின்றி செயலிழந்து காணப்படுகின்றது. இதனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இயங்கு நிலைக்கு கொண்டு வந்து இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட மீனவ இயந்திரப் படகுத் தொழிலாளர்கள் நன்மையடையும் வகையில் மாற்றியமைக்கு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென்கிழக்கு பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள “கோப்சிற்றி” பல்பொருள் அங்காடியை அபிவிருத்தி செய்து கவர்ச்சிகரமான ஒரு விற்பனை நிலையமாக மாற்றியமைப்பது தொடர்பான கள விஜயங்கள் பணிப்பாளர் சபைத் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருமானஏ.கே.எம். அஸ்ரப் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பணிப்பாளர் சபை உறுப்பினர் றிசாத் ஏ காதர், பொது முகாமையாளர் எஸ்.எல்.அல்- முனவ்வர், பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் கிளை முகாமையாளர் எஸ்.எம்.எம்.ஜெமீல் ஆகியோருடன் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த செயற்றிட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கூட்டுறவுத்துறை மாகாண ஆணையாளர் எந்திரி. என்.சிவலிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: