24 Oct 2020

கிழக்கில் மாகாணத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று - பொது நிகழ்வுகளுக்கு தடை.

SHARE


கிழக்கில் மாகாணத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று - பொது நிகழ்வுகளுக்கு தடை.

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதைனையில் திருகோணமலையில் 6 பேரும் மட்டக்களப்பில் 11 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 9 பேர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சனிக்கிழமை (24) கண்டறியப்பட்டுள்ளதாகவும் இன்றில் இருந்து எந்து பொது நிகழ்வுகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிமனையில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மினுவான்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தனி தொற்றைத் தொடர்ந்து, பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, பல இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கிழக்கு மாகாணத்தில் இருந்து குறித்த மீன் சந்தைக்கு பாரியளவிலான மீன்கள் கொண்டு செல்வது வழக்கம். இவர்களை அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. இதில் திருகோணமலையில் 25 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


அவ்வாறே மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி , வாழைச்சேனை பிரதேசத்தில் 65 பேரை அடையாளம் கண்டு அதில் 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.


அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சுகாதார பிரிவிலுள்ள பொத்துவில் கல்முனை பகுதியில் 34 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் அரைவாசி பேருக்கு பி.சி.ஆர் பிசோதனையில் 8 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டதுடன் அம்பாறை பிராந்திய சுகாதார பிரிவில் திவிலப்பிட்டியாவில் விழா ஒன்றுக்கு சென்று திரும்பியவருக்கு பி.சி.ஆர் பிரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரை இதனின் தாக்கம் காணப்படுகின்றது. எங்களால் அறிந்தவற்றை நாடிச் சென்று செய்துள்ளோம் ஆகவே எங்களுக்கு அறியாமல் இன்னும் பல நபர்கள் தொற்றுடன் காணப்படலாம் ஆகவே கிழக்கு மாகாண சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்களிடம் வேண்டுவது, பேலிய கொடை மீன் சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் இருப்பின் அல்லது நீங்கள் அறிந்தளவில் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள சுகாதார வைத்திய பணிமனை அல்லது பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கவும்.


ஏன்என்றால் ஆரம்பத்திலே தொற்றுள்ளவர்களை அடையாளப்படுத்தி சிகிச்சையளிக்கும் இடத்தில் இந்த தொற்றினுடைய வீரியத்தையும், பரவுகின்ற வீதத்தையும் மட்டுப்படுத்தலாம். ஆகவே இனிவரும் காலம் மிகவும் சவாலான காலங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.


இந்த கண்ணுக்கு தெரியாத எதிரியை சுகாதார திணைக்களத்தாலேயோ, முப்படைகளினாலேயோ மட்டும் கட்டுப்படுத்தமுடியாது இது மக்கள் அனைவரும் ஊடகங்கள் உட்பட எல்லோரும் சேர்ந்து மிகவும் அவதானமாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்த கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த முடியும் .


எனவே பொதுமக்கள் சுகாதார அமைச்சால் அறிவித்த சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் , போன்றவற்றை கடைபிடிக்குமாறும், இன்றில் இருந்து எந்து பொது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: