15 Sept 2020

வாள் வெட்டில் 15 வயது மாணவச் சிறுவன் பலியான சம்பவம் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு.

SHARE

வாள் வெட்டில் 15 வயது மாணவச் சிறுவன் பலியான சம்பவம் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறைப் பிரதேசத்தில் கடந்த 22.08.2020 அன்று இரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவச் சிறுவனது கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பு புதன்கிழமை 16.09.2020 இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை விநாயகர் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் இடம்பெற்ற  அந்தச் சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தமாக 6 சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் நால்வருக்கான அடையாள அணிவகுப்பே புதன்கிழமை 16.09.2020 ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி இடம்பெற்ற அந்தப் படுகொலைச் சம்பவத்தில் மாணவனான ரமணன் திவ்வியராஜ் என்பவர் பலியானதுடன் அவரது உறவினர் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கலடி பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் பத்தாம் தரத்தில்; கல்வி பயிலும் செங்கலடி, கொம்மாதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வர்களிடையே ஏற்பட்ட மோதலே  இறுதியில் படுகொலையில் போய் முடிந்தது என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவிக்கப்பட்டதாவது, இரு குழுக்ககுக்கிடையே ஏற்பட்ட மோதலைப்பற்றி வீட்டுக்குச் சென்று கூறியபோது காயமடைந்த மாணவனின் உறவினர்கள் இருவர் அன்றிரவு கொம்மாதுறை விநாயகர் வீதியிலுள்ள சம்மந்தப்பட்ட மற்றைய மாணவனின் வீட்டிற்கு சென்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கருத்து மோதல் வலுப்பெற்று வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

பாரிய வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சந்தை விதியைச் சேர்ந்த மாணவன் ரமணன் திவிராஜ் (வயது 15) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது உறவினர்களான இருவரும் வெட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரனைகளை மேற்கொண்டதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வாள் ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்து ஆயுதக் கலாசாரத்தை ஒழிக்குமாறு கோரி உறவினர்களாலும் பொதுமக்களாலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இம்மாதம் 02ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமைகும் குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: