ஆரையம்பதி தொகுதிக்கான வாக்கெடுப்பு நிலையம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று (22) சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு ஆரையம்பதி தொகுதிக்கான வாக்கெடுப்பு நிலையம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறுவப்பட்டு வாக்கெடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதனை காணகூடியதாக இருப்பதுடன், குறித்த தேர்தலில் வழமைக்கு மாறாக இம்முறை ஒன்லைன் மூலமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பு நிலையங்கள் அனைத்திற்கும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக மூன்று பொலிசார் வீதம் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், வாக்காளர்களுக்கான அனைத்துவிதமான ஏற்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழமையான தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்படத்தக்கவிடயமாகும்.
வாக்கெடுப்பு நிலைய பொறுப்பதிகாரிகளாக பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கடமையாற்றுவதுடன், 10 இற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்பானது மாலை 4.30 மணியுடன்நிறைவடைந்து இன்று நள்ளிரவின் பின்னர் முடிவுகள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 வேட்ப்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் 14 பேர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment