6 Dec 2019

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 13 குடும்பங்கள் இடம்பெயர்வு.

SHARE
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 13 குடும்பங்கள் இடம்பெயர்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 13குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

வீடுகளில் வெள்ளநீர் புகுந்தமையினால், இம்மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களில் வீடுகளில் தங்கியுள்ளனர். பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் இருந்து 8குடும்பங்களும், படையாண்டவெளி கிராமத்தில் இருந்து நான்கு குடும்பங்களும் கொக்கட்டிச்சோலை கிராமத்திலிருந்து ஒரு குடும்பமும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதான வீதி ஊடாக வெள்ள நீர் தொடர்ச்சியாக பாய்ந்து கொண்டிருப்பதனால் மாவடிமுன்மாரி, நாற்பதுவட்டை, தாந்தாமலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

புளுகுணாவை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும், ஆறுகளின் ஊடாக அதிக நீர் பாய்ந்துகொண்டிருக்கின்றது. இதனால் குறித்த நீர் வடிந்தோடுகின்ற ஆறுகளை அண்டிய பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயல்நிலங்கள் பலவும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், வீதிகள் சில வெள்ளநீரால் உடைக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிலரும், வெள்ளம் காரணமாக வீடுகளில் இருந்து பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலையில், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்து பரீட்சைக்கு தோற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: