29 Nov 2019

மானிட விடுதலையை நேசித்து தமை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள் மாவீரர்நாள் -துளசி

SHARE
மானிட விடுதலையை நேசித்து  தமை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள் மாவீரர்நாள்.என ஜனநாயகபோராளிகள் கட்சியின் ஊடகபிரிவு பொறூப்பாளர் க.துளசி புதன்கிழமை ( 27) விடுத்துள்ள அறிகௌகையில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா வது....



தமது இனம் வாழ்வுரிமை இழந்து தமது நாட்டுக்குள்ளேயே ஏதிலிகள் ஆக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அகிம்சை முறையிலும் அரசியல் ஊடாகவும் தீர்வுகள் எட்டப்படா நிலையில் தமது சந்ததியாவது இலங்கை தீவில் தங்களது பூர்வீக நிலங்களில் ஆட்சி உரித்துடன் வாழ்வதற்கு தமது இளமை காலங்களை துறந்து உறவுகளை பிரிந்து தமது இன்னுயிரை அர்பணிக்க புறப்பட்ட அற்புதமானவர்கள்தான் எமது மாவீரர்கள். அவர்களின் தியாகங்களையும் மாண்புகளையும் நினைவில்கொள்ளும் புனித நாள்

 அன்பான உறவுகளே
எமது விடுதலைப்போராட்டம் போராளிகளது அதி உச்ச தியாகங்களையும் எமது மக்களின் பேராதரவு காரணமாகவும் உலகத்தின்பால் எமது போராட்டத்தின் நியாயாதிக்கமும் எமது விடுதலைப்போராட்டத்திக்கு வலுச்சேர்த்திருந்தது. இருந்தும் 2009 பிராந்திய நலன் சார்ந்து எமது விடுதலைப்போராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பெரும் மனித பேரவலத்துடன் முள்ளிவாய்க்காலில் முடித்து வைக்கப்பட்டது. 

தமிழினத்தின் அரசியல் உரிமைகளுக்கு வலுச்சேர்த்த ஆயுதபோராட்டம் இழக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் தமிழர் தரப்பு அரசியல் வடிவத்தின் அதி உச்ச செயலாற்றுகை பெரும் நம்பிக்கையீனங்களையே அண்மைய ஆட்சிமாற்ற  முடிவுகள் கோடிட்டுகாட்டுகின்றன.
ஆகவே எதிர்கால தாயக அரசியல் பரப்பில் புதிய முனைப்புகள் புதிய சிந்தனைகள் புதிய முகங்கள் தொடர்பில் எமது மக்கள் சிந்திக்க தலைப்பட்டுள்ளனர். 
குறிப்பாக பிராந்திய அரசியலுறவு தொடர்பில் இந்தியா தனது நண்பர்கள் யார் என்பதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறோம். இந்தியாவின்  உண்மையான நண்பர்கள் தமிழர்களே. 
இலங்கையின் எதிர்கால ஆட்சி உரிமைகளில் தமிழர்களின் நலன் சார்ந்து தமிழர் தரப்பு பங்காற்ற முயலவேண்டும். 
எம் புலம்பெயர் உறவுகளே இனி வரும் காலங்களில் வாழ்வாதார உதவிகளோடு நின்றுவிடாமல் நீங்கள் கற்றுணர்ந்த உங்களின் தொழில் புலமையினையும் பெருமளவிலான முதலீடுகளையும் வடகிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். பொருளாதாரரீதியாக நலிவுற்றுள்ள எமது இனம் மீட்சிபெற வழிவகுக்கும். அதேபோன்று செய்யப்படுகின்ற முதலீடுகளுக்கான பாதுகாப்பினை எமது அரசியல் தலைமைகள் உருவாக்க வேண்டும்.

தாயக அரசியல் நிலமைகளைக் கருத்திற் கொண்டும் தாயக. மக்களின் அவலங்களை கருத்திற்கொண்டும் புலம் பெயர் அமைப்புக்களும் சாத்தியப்பாடான தீர்வுகளை எட்டுவதற்கும் தாயக அரசியற் பரப்பை செய்யப்பட்ட எல்லாத் தியாகங்களின் பேரிலும் ஒற்றை இலக்குகளை நோக்கி பயணிக்கும் ஓர் அரசியல் செல் நெறிப் போக்கை கட்டமைக்க தமது பயனுறுதி மிக்க காத்திரமான பங்களிப்பை நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம். 

நாம் என்றுமே மாவீரர்களின் தியாகத்திற்கும் மக்களின் உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டே  பயணிப்போம் எனவும் எமது மாவீரர்களின் தியாகங்கள் மீதேறி அரசியற் பகடையாட எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் இந்த மாவீரர் நாளிலே உறுதி பூணுகின்றோம். 

அதனடிப்படையில் தாயகத்திலும் சர்வதேசமெங்கிலும் வாழ்கின்ற இந்தத் தேசத்திற்காய் தமது வாழ்நாளை அர்ப்பணித்த. போராளிகள், தேசப்பற்றாளர்கள் விடுதலைப் புலிகள் சார்ந்த கட்டமைப்புக்களை இணைத்துக்கொண்டு அவர்களது பாரிய பங்களிப்போடு எமது மக்களுக்கான ஓர் காத்திரமானதும் உண்மையானதுமான அரசியல் பயணத்தை முன்னெடுக்க இந்தப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுகின்றோம்.


SHARE

Author: verified_user

0 Comments: