28 Oct 2019

நல்லிணக்கத்திற்கான எங்கள் குரல் விவாதப் போட்டியின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு.

SHARE
“நல்லிணக்கத்திற்கான எங்கள் குரல்" விவாதப் போட்டியின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “நல்லிணக்கத்துக்கான எங்கள் குரல்" எனும் கருப்பொருளில் அமைந்த இளைஞர் கழகங்கள், பல்கலைக் கழக மாணவர், பாடசாலை மாணளவர் அணிகளுக்கிடையிலான விவாதப்போட்டி, நிறைவுக் கட்டத்தை எட்டிய நிலையில் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஜேர்மன் வெளிவிவகார அலுவலகத்தினதும் நிதி உதவியுடன் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க பொறிமுறைகளை உறுதிப்படுத்தல் எனும் செயற்றிட்டத்துடன் இணைந்து இந்த விவாதப் போட்டி இடம்பெற்று வந்தது.

நிலைமாறுகால நீதி, ஊடகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பால் நிலைச் சமத்துவம், தகவல் பெறும் உரிமை, உள்ளுராட்சி, சமூக பொறுப்புக் கூறல், ஜனநாயகம், அரசியல் யாப்பு போன்ற விடயதானங்கள் வாயிலாக இடம்பெறும் விவாதங்களில் சமூகத்தின் சகல தரப்பாரும் பங்குபற்ற  ஒரு வாய்ப்பளிக்கப்பட்டதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அலுவலர் இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.

தன்னாமுனை மியானி நகர் கேட்போர் அரங்கில் சனிக்கிழமை 26.10.2019 இடம்பெற்ற இந்துமதி தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் வெற்றியாளர்களும் பங்குபற்றியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

“நல்லிணக்கத்திற்கான எங்கள் குரல்" எனும் இந்த விவாதப்  போட்டியில் பல்கலைக்கழகத்தின் 6 அணிகளைச் சேர்ந்த 24 ஆண் பெண் மாணவர்கள், 19 இளைஞர் அணிகளைச் சேர்ந்த 76 பேர், 18 பாடசாலைகளைச் சேர்ந்த 72 மாணவர்கள் என அனைவரும் இன, மத, பால் வேறுபாடுகளுக்கப்பால் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கொழும்பு அலுவலக உத்தியோகத்தர்களான நிகழ்ச்சித் திட்ட தலைமை அலுவலர் இந்துமதி ஹரிஹரதாமோதரன், திட்ட இணைப்பாளர் புண்ணியமூர்த்தி ஜீவிதா, அதன் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக உத்திஆயோகத்தர்களான ஆவணப்படுத்தலுக்கான சிரேஷ்ட அலுவலர் கே. நிர்மலா, சிரேஷ்ட சமூக ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுகிர்தவிழி, சமூக அணிதிரட்டாளர வை.ஜெயதர்ஷன், இணைப்பாளர் பி.மணிவண்ணன் உட்பட பங்குபற்றுநர்களும் பார்வையாளர்களாக அரச, அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், துறைசார்ந்தவர்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: