7 Oct 2019

உள்ளதில் நல்லது எது என்று பார்த்தால் சிறுபான்மையினருக்கான தற்போதைய தெரிவாக சஜித் பிறேமதாஸாதான் பொருத்தமானவர் கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்

SHARE
உள்ளதில் நல்லது எது என்று பார்த்தால் சிறுபான்மையினருக்கான தற்போதைய தெரிவாக சஜித் பிறேமதாஸாதான் பொருத்தமானவர்
கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்
உள்ளதில் நல்லது எது என்று நோக்கினால் தற்போது போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களில் சஜித் பிறேமதாஸாவைத்தான் சிறுபான்மையினர் பொருத்தமானவர் எனக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு முஸ்லிம்களின் ஆதரவு என்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பிரதேச மட்டக் கலந்துரையாடல் ஏறாவூரில் திங்களன்று 07.10.2019 இடம்பெற்றது.

பிரதேச முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்,
அடுத்து வரப்போகின்ற ஜனாதிபதித் தெரிவுக்காக தற்போது போட்டியிடும் வேட்பாளர்களில் யார் சிறுபான்மையினருக்கு உதவக் கூடியவர் என்று தீர்மானிப்பதில் அவ்வளவு சிரமங்கள் இருக்க முடியாது. இதில் முரண்பட்டுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. உள்ளதில் நல்லது என்ற அடிப்படையில் பார்த்தால் சஜித்தே முதலிடத்துக்கு வருவார்.

அதனடிப்படையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் சஜித் சார்பான தீர்மானத்துக்கு வந்துள்ளது.

இது சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சாணக்கியமான முடிவு என்றே நானும் கருதுகின்றேன்.

உடன்படிக்கை செய்யாமல் ஆதரவு வழங்குவதா என்ற கேள்விகள் இருந்தாலும் சிறுபான்மையினரின் நலன் சார்ந்து சில ஒப்பந்தங்களைச் செய்தால் அந்த விடயம் சிங்கள மக்கள் மத்தியிலே திரிவுபடுத்தப்பட்டு பூதாகாரமாகப் பரவி அவரை சங்கடத்தில் மாட்டி விடும் என்பதால் சாணக்கியமான அணுகுமுறைகள் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின் மூலம் நம்பிக்கை அடிப்படையில் சஜித்துக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம்”

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏதோவொரு அடிப்படையில் சஜித் பிறேமதாஸாவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்துக்கு வரக் கூடும். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களை வலியுறுத்தி இந்த விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பு தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றது.

கடந்த வாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்குமான பேச்சுவார்த்தை அமைச்சர் றவூப் ஹக்கீமின் இல்லத்திலே நடைபெற்றது.

அவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்பற்றியும் ஜனாதிபதி வேட்பாளரிடம் நான் நேரடியாக வலியுத்தியுள்ளேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: