18 Sept 2019

கிழக்கிலுள்ள மீனவர்களையும் விவசாயிகளையும் கூட தொழிலாளர்களாக மாற்றி சீனாவுக்கு வாய்ப்பளிப்பதிலேயே ஆட்சியாளர்கள் திட்டம் வகுத்துள்ளார்கள்.

SHARE
கிழக்கிலுள்ள மீனவர்களையும் விவசாயிகளையும் கூட தொழிலாளர்களாக மாற்றி சீனாவுக்கு வாய்ப்பளிப்பதிலேயே ஆட்சியாளர்கள் திட்டம் வகுத்துள்ளார்கள்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின்இணைப்பாளர் பிரான்ஸிஸ் பிரியங்கர கொஸ்ரா
இலங்கையில் பாரிய பொருளாதார முதலீட்டு வலயங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள பாரிய முதலீட்டு வலயத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதனால் மறைமுகமாக கிழக்கிலுள்ள பல ஆயிரக்கணக்கான  பாரம்பரிய மீனவர்களும் விவசாயிகளும் தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள் என்பதே ஆபத்தான விளைவாக இருக்கப்பபோகின்றது என தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் (National Fisheries Solidarity Movement)  பயிற்சி இணைப்பாளர் பிரான்ஸிஸ் பிரியங்கர கொஸ்ரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களை இந்த விடயத்தில் அறிவூட்ட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக செவ்வாய்க்கிழமை 17.09.2019 கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஆட்சியாளர்கள் பெரும் பொருளாதார நலன்களை மாத்திரமே கொண்டு இயங்குவதால் மக்களின் அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியோ வாழ்விடப் பிரச்சினைகள் பற்றியோ அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப்போவதில்லை.

இலங்கையில் 2030 ஆம் ஆண்டளவில் அடையத் தீர்மானித்திருக்கும் பெரும் பொருளாதார முதலீட்டுத் வர்த்தக வலயத் திட்டங்கள் பற்றி ஆராய்ந்தால் அது முழுக்க முழுக்க ஏழை மக்களை இலக்கு வைத்தாகவே காணப்படுகின்றது.

நாட்டின் வடக்கில் தொடங்கி கிழக்கை ஊடறுத்து தெற்கில் முடியும் இந்த பெரும் பொருளாதார முதலீட்டு வலய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 86 இலட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப் போகின்றார்கள் என்கின்ற பேராபத்து நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது.

இது ஒரு புறமிருக்க இந்த பாரிய முதலீட்டு அபிவிருத்தித் திட்டத்தினால் இங்குள்ள ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு போதும் விமோசனங் கிடைக்கப்போவதில்லை.
சீன நாட்டின் முழுப்பங்களிப்புடன் செய்யத் திட்டமிட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தியின் கீழ் சீனாவிலிருந்தே தொழிலாளர்களும், அபிவிருத்திக்குத் தேவையான சகல இயந்திராதிகளும், வல்லுநர்களும் என்று எல்லாமும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படவிருக்கின்றன.
ஆக ஒட்டு மொத்தத்தில் இந்த பாரிய முதலீட்டு அபிவிருத்தித் திட்டத்தினால் சுமார் 80 சத வீதம் பெருத்த இலாபமடையப் போவது சீனாவும் இலங்கையின் ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளுமேயாகும்.

எனவே, நமது ஏழை மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் சுரண்டி அவர்களை வாழ்விடமற்ற, தொழிலற்ற பரதேசிகளாக மாற்றும் இந்தப் பாரிய முதலீட்டு அபிவிருத்தித் திட்டம்பற்றி மக்கள் அறிந்திருப்பதோடு அதற்கு எதிர்வினையாற்றவும் வேண்டும்.

இந்த விடயத்தில் பொடுபோக்காக இருந்தால் பாதிக்கப்படப்போவது சிங்களம் தமிழ் முஸ்லிம் என்றில்லாமல் அனைத்து பாமர ஏழைகளுமேதான்;” என்றார். 




SHARE

Author: verified_user

0 Comments: