28 Apr 2019

வவுணதீவு பொலிசார் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும். மு.நா.உ. அரியம் வேண்டுகோள்.

SHARE
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் படுகொலையின் சூத்திரதாரி யாரென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும், பொதுமக்களுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் தெரிய வந்துள்ள போதிலும் வவுணதீவு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி இன்னும் விடுவிக்கப்படவில்லை. அந்த முன்னாள் போராளி மிகவிரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் தெரிவித்தார்.
அவர் இவ்வடையம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த வருடம் (2018 நவம்பர் 30) படுகொலை செய்தவர்களும்  இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான் என்பது சனிக்கிழமை (2019 ஏப்ரல் 27) கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

என்னை இரண்டு தடவைகள் (2018,டிசம்பர் 22, மற்றும் 2019, மார்ச்,18, ஆகிய தினங்களில் ) கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்து வவுணதீவு பொலிசார் கொலைசெய்யப்பட்டமை சம்பந்தமாக என்னிடம் விசாரணை மேற்கொண்டனர்.

2018, நவம்பர் 27, மாவீரர் தினத்தில் தாண்டியடி, மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு எனது வாகனத்தில் யார் யார் சென்றீர்கள் என்பது தொடர்பாகவும் வவுணதீவு பொலிசார் இருவரும் கொலை தொடர்பாகவே விசாரிப்பதாகவும் கூறினர்.

எனது வாகனத்தில் எவருமே அன்றய தினம் வரவில்லை நான் மட்டுமே சென்றேன் என்பதை கூறினேன்.

வவுணதீவு பொலிசார் கொலை செய்யப்பட்டதற்கும், எனக்கும் எந்த சந்தர்ப்பமும், இல்லாத நிலையில் ஏன் அதுசம்மந்தமான விசாரணை என்மீது என கேட்டபோது மாவீரர் தினத்தில் புகைப்படம் எடுத்த மூன்று இளைஞர்களும் எனது வாகனத்தில் வந்ததாக சிலர் கூறியதன் காரணமாக விசாரிப்பதாக தெரிவித்தனர். உண்மைக்கு புறம்பான தகவல் என்பதை நான் கூறினேன்.

வவுணதீவு பொலிசார் இருவர் கொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து மாதம் கடந்துள்ளநிலையில் சனிக்கிழமை (27.04.2019) அந்த கொலைக்கான சூத்திரதாரி கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

அதுவும் இஸலாமிய பயங்கர வாத அமைப்பு கடந்த 21.04.2019, தற்கொலை தாக்குதல் நடத்திய பின்னரான விசாரணையே வவுணதீவு பொலிசாரின் கொலைக்குரிய உண்மை வெளிவந்துள்ளது.

என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் வவுணதீவு பொலிசார் கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டிருப்பார்கள். எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். முன்னாள்போராளிகள் எத்தனைபேர் விசாரிக்கப்பட்டனர். இன்னும் சிலர் தடுத்துவைக்கப்பட்டும் உள்ளனர். உண்மைகளை கண்டறியப்பட வேண்டும் அதற்காக எந்த குற்றமும் செய்யாதவர்களும் சந்தேகத்தில் நோக்குவது உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வாய்ப்புள்ளது அல்லவா?.

எனவே வவுணதீவு படுகொலை சம்பவத்தின் சூத்திரதாரி யாரென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பொதுமக்களுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் தெரிய வந்துள்ள போதிலும் வவுணதீவு சம்பவத்தின்போது சந்தேகத்தின் பேரில் கன்னங்குடா கரையாக்கன்தீவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி இராஜகுமாரன்(அஜந்தன்) தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார்.

வவுணதீவு சம்பவம் தொடர்பாக இலங்கை புலனாய்வு திணைக்களம் சரியாக செயற்படாத காரணத்தினாலும், சம்பவம் திசை திருப்பட்டதாலும் முன்னாள் போராளியை மட்டும் தடுத்து வைத்துள்ளார்கள். எனவே முன்னாள் போராளி இன்னும் விடுவிக்கப்படவில்லை. சந்தேகத்தின்பேரில் தடுத்துவைத்துள்ள முன்னாள் போராளியை பாதுகாப்பு அமைச்சு விடுவிப்பதோடு அவருடைய மோட்டார் சைக்கிளையும் வழங்கவேண்டும் என இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: