16 Jan 2019

சூறைக் காற்றினால் சரிந்து வீழ்ந்த தகரக் கொட்டிலை திருத்தியமைப்பதற்காக ஏழைப் பெண் வங்கியிலிருந்து எடுத்த பணம் தவறிப்போனதால் கவலை நபர் ஒருவர் தெருவில் தவறிப்போன பணப் பையை எடுத்துச் செல்வது சிசிரிவி காணொளியில் பதிவு

SHARE

சூறைக் காற்றினால் சரிந்து வீழ்ந்த தகரக் கொட்டிலை திருத்தியமைப்பதற்காக ஏழைப் பெண்  வங்கியிலிருந்து எடுத்த பணம் தவறிப்போனதால் கவலை
நபர் ஒருவர் தெருவில் தவறிப்போன பணப் பையை எடுத்துச் செல்வது சிசிரிவி காணொளியில் பதிவு
வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை கடந்த சில நாட்களாகப் பெய்த மழையுடன் வீசிய சூறைக்காற்றினால் சரிந்து வீழ்ந்த தனது தகரக் கொட்டிலைத் திருத்தியமைப்பதற்காக வங்கியிலிருந்து மீளப் பெற்று எடுத்து வரும்போது அப்பணம் கை தவறிப்போனதால்  ஏழைப் பெண்ணொருவர் கவலையடைந்துள்ள சம்பவம் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஆறுமுகத்தான்குடியிருப்பைச் சேர்ந்த நாகமணி ராகினி என்ற வறுமைப்பட்ட பெண்ணின் வாழ்விடமான தகரக் கொட்டில் கடந்த சில நாட்களில் நிலவிய கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக தென்னை மரம் கொட்டில் மீது வீழ்ந்ததில் கொட்டில் சேதமடைந்து சரிந்துள்ளது.

சேதமடைந்த தகரக்கொட்டிலை சரி செய்து கொள்வதற்காக அவர் தான் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை கடந்த வெள்ளிக்கிழமை வங்கியிலிருந்து மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மீளப் பெறப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் பணம், வங்கி சேமிப்புப் புத்தகம், தேசிய ஆளடையாள அட்டை என்பன ஒரு சேர வைக்கப்பட்டிருந்த பணப்பை  வரும் வழியில் செங்கலடி வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சமீபமாக வைத்து தவறிப் போயுள்ளது.

உடனடியாக தேடியும் பணப்பையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பிரதான வீதியின் கடைத்தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிக் கமெராக்களைப் பரிசோதித்தபோது பெண்ணின் தவறிப்போன பணப்பையை சைக்கிளில் சென்ற  நபர் ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது.

எனினும் அந்நபர் அந்தப் பணப்பையினுள்ளே உள்ள வங்கிப் புத்தகம், தேசிய ஆளடையாள அட்டை  என்பவற்றின் விவரங்களைக் கண்டறிந்து பெண்ணிடம் அவற்றை ஒப்படைக்கவில்லை என்று பணத்தையும் ஆவணங்களையும் தவற விட்ட பெண் கவலை வெளியிட்டார்.
தான் சேமித்து வைத்திருந்த பணத்தைப் பறிகொடுத்ததால் வசிப்பிடத்தைத் திருத்தியமைக்க முடியாமலும், தைப்பொங்கல் சோபிக்காமலும் காலங் கழிந்ததாக அந்த ஏழைப் பெண் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: