17 Dec 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் இல் சேரும் எண்ணம் எனக்கில்லை – வியாழேந்திரன் எம்.பி.

SHARE
ஐக்கிய தேசியக் கட்சியில் இல் சேரும் எண்ணம் எனக்கில்லை!  என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) தெரிவித்துள்ளார். திங்கட் கிழமை (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல்,  அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை சில ஊடகங்களும்  செய்து வருகிறார்கள். 

காலப்போக்கில் இத்தகைய வேலைகளை செய்யும் ஊடகங்களை மக்கள் பொய் ஊடகங்களாக நிராகரிக்கும் நிலை ஏற்படும். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எனது கிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல் நோக்கில் தான் பிரதி அமைச்சைப் பொறுப்பெடுத்தேன். கிழக்கில் தமிழர்கள் இனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள். நில வளம் சூறையாடப்படுகிறது. இல்லை என்று யாராவது பகிரங்கமாக சொல்லட்டும்.  அந்த மக்களை காப்பாற்ற வேண்டியது எம் பொறுப்பு. 

தற்போதைய சூழலில் நான் எடுத்து பதவியை   தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பதவி இல்லாவிட்டாலும் நான் ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி உடன் தொடர்ந்து பேசுகிறேன். அதில் எதுவித மாற்றமும் இல்லை. அதற்காக ஜனாதிபதி இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரப்போறேன் என்ற கதை மிகக் கேவலமானது. அத்தகைய வேலையை கனவிலும் நினைத்து பார்க்கமாட்டேன். 

இன்னொன்றையும் கூறிக்கொள்கிறேன்  “அரசியலில் எந்த தோல்வியும் நிரந்தரமானதல்ல”. அதை விடுத்து யாரும்; கற்பனைக்கு வந்ததை எழுத வேண்டாம். இரண்டு பக்கமும் பேசி செய்தியை வெளியிடுங்கள். அதுதான் ஊடகத் தர்மம். என அதில் குறிப்பிட்டுள்ளார்.

சதாசிவம் வியோழேந்திரன் புளட் கட்சியின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ப்பட்டு செயற்பட்ட வந்த நிலையில்  தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த வெளியேறி கிழக்கு அவிவிருத்திப் பிரதியமைச்சர் பதவி ஒன்றை பெற்றுக் கொண்டிருந்தார். தற்போது புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில்  நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் பிரதியமைச்சர் பதவியும் இல்லாமல் போயுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அவரைப்பற்றி பல விமர்சனங்கள் எழுந்தவண்ணமள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: