மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி என்ற தொனிப்பொருளில் புதன்கிழமை (26) காலை 9.25 மணிக்கு தேசிய பாதுகாப்பு தினம் தேசிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய பாதுகாப்பு நிகழ்வினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
காலை 9.25 மணிக்கு தேசியக் கொடியை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்து தேசிய கீதத்தை அடுத்து 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ நிலையமும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இணைந்து தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் தேசிய பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளின் முக்கிய செயற்பாடாக தேசிய பாதுகாப்பு தினம் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி, அனர்த்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் காணி- திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளரான மட்டக்களப்பு மாவட்டத்துக்கு புதியதாக நியமனம் பெற்றுள்ள உதவிப்பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா, திணைக்களத்தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment