12 Sept 2015

மக்களுக்கான சேவையில் பொடுபோக்காக இருப்பவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரும் கடுமையாக தண்டிக்கப்படுவர் -முதலமைச்சர்

SHARE
ஊழல் செய்யும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்களை இன்று காலை சந்தித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்
கிழக்கு மாகாணத்துக்குள் வரும் எந்த திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டால் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

அது மாநகர சபையாக இருந்தாலும் அல்லது நகர சபையாக இருந்தாலும் மற்றும் பிரதேச சபையாக இருந்தாலும் அங்கு கடமையாற்றும் எந்த உத்தியோகத்தர்கள் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கப்படும். அந்த உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் செயலாளர்களிடம் விளக்கம்  கேட்கப்படும். அதிலுள்ள மேலதிகாரிகள் ஊழல் செய்தாலும் தண்டனை வழங்கப்படும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய எந்தவொரு தேவையாக இருந்தாலும் அதை எங்களிடம் கேட்டால் அதை நாங்கள் வழங்க ஆயத்தமாக இருக்கின்றோம்.

உள்ளூராட்சி மன்றங்களின் வளர்ச்சி அதன் அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்தி உள்ளூராட்சி மன்றங்களை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் வீதிகள் வடிகான்கள் பொதுவிடங்கள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உரியது என்றார்.

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சு செயலகத்தின் மேலதிக செயலாளர் எம்.றாபி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.சலீம் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் காத்தான்குடி நகர சபை செயலாளர் உட்பட நகர சபை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: