13 Oct 2020

ஊடகவியலாளர்கள் மீது முல்லைத்தீவில் தாக்குதல்

SHARE

முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தும் முகமாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது.முறிப்பு பகுதியில் தொடர்ச்சியாக காடழிப்பு மற்றும் தேக்குமரங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்து வந்துள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் கும்பல் ஒன்று இயங்கி வருகிறமையினை அறிந்த​ முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை ஊடகவியாலளர் ச.தவசீலன் மற்றும் க.குமணன் என்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் குறித்த சந்தேகபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் குறித்த குழு தமக்குக் காப்பரணாக குறித்த நிறுவனத்தையும் மரக்கூட்டுத்தாபனத்தையும் பயன்படுத்தி வந்திருக்கின்றது.

நீண்டகாலமாகக் குறித்த மரக்கடத்தல் தொடர்பில் குமுழமுனை மற்றும் முறிப்பு பகுதி மக்களால் பொறுப்பு வாய்ந்த தரப்புக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் நபர் தேக்கு மரத்தினாலான மர வீடு ஒன்றை அமைத்து வருகின்றார் எனவும், அதனையாவது வெளியில் கொண்டு வருமாறும் முறிப்பு மற்றும் குமுழமுனை மக்கள் ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் தவசீலன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து திங்கட்கிழமை பிற்பகல் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முற்பட்டபோது குறித்த நபரும் அவருடைய கையாட்கள் மூவரும் வாச்சி, கொட்டன், தடிகள், இரும்புக்கம்பிகளால் இருவரையும் கடுமையாகத் தாக்கி பணயக் கைதிகளாக்கியுள்ளனர்.

பின்னர் ஊடகவியலாளர்களின் தொலைபேசி மற்றும் கமராக்களில் இருந்த காட்சிப் பதிவுகளை அழிக்கவைத்ததுடன், அவர்களிடம் இருந்த தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் இருவரையும் திருடர்கள் என்று தெரிவுக்குமாறு நிர்ப்பந்தித்து காணொளி ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். அதன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் முறையிடவுள்ளதாக ஊடகவியலாளர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குலாளிகளுக்கு அதிகாரத் தரப்புடன் நெருக்கமான உறவுகள் இருக்கின்றன எனவும், தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: