உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ஆழ்மனங்களில் பதிந்துள்ளன.
இந்த தாக்குதல்களில் அவயங்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து நாட்டு மக்களும் அந்த ரணங்களை நினைந்து ஓராண்டு நினைவை ஆத்மார்த்தமாக நினைவுகூரும் வகையில் இன்று காலை ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாட்டில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக மெழுகுதிரி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களினை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலில் 31பேர் உயிரிழந்திருந்ததுடன் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment