8 Dec 2022

சம்மாந்துறையில் எக்றோ குறூப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெல் தொகுதி வெளியீடு ஒரு பார்வை.

SHARE

 

(நூருல் ஹுதா உமர்)

சம்மாந்துறையில் எக்றோ குறூப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட  விதைநெல் தொகுதி வெளியீடு ஒரு பார்வை.
அம்பாறை மாவட்டத்தில் 2022/2023 மகாபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் சனாதிபதியின் ஆலோசனைகளுக்கமைவாக சிபாரிசு செய்யப்பட்டுள்ள சேதன மற்றும் அசேதன பசளைகள் யாவும் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் நடந்துள்ளன.  இம்முறை விவசாயிகள் சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கு இவ்வாறான அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதை நெல்லும் கிடைப்பது ஒரு வரப்பிரசாதமாகும் என அம்பாறை மாவட்ட செயலாளர்  ஏ.ஜே.எம். டக்ளஸ் தெரிவித்தார்.

எக்றோ குறூப் முன்னெடுத்து வரும் பிரதான பணியான அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெல் உற்பத்தித் திட்டத்தின் நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் இங்கு கூறுகையில், இத்திட்டம் இங்கு அமுலுக்கு வரும் காலகட்டத்தில் நான் இருந்திராவிட்டாலும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் உரையின் போதும் இவ்வமைப்பின் நடவடிக்கைகளின் போதும், மற்றும் இவர்களின் முன்னேற்ற அறிக்கைகளைப் பார்வையிடும் போதும் இதன் முன்னேற்றப்படிகள் தெட்டத்தெளிவாக விளங்குகின்றன. எனவே குறைந்த செலவில் கூடிய விளைச்சலைப் பெறவேண்டுமேயானால் இவ்வாறான தரமான விதைநெல் பாவனை அவசியமாகும். அதனடிப்படையில் இம்மாவட்டத்தின் விதைநெல் தேவையை சம்பூரணமாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக Agro Group  இன் சேவை அத்தியவசியமானதொன்றாகும். ஆகையால் எதிர்காலத்தில் என்னால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவேன் எனக் கூறி இவ்வமைப்பின் சேவையையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டஅம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர்  எம்.எஸ்.ஏ. கலீஸ், Agro Group  ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரையும் மிகவும் கச்சிதமான முறையில் இயங்கிக்கொண்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் மேற்படி அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெல் உற்பத்தித்திட்டம் இங்கு அமைவதற்கு தானும் அம்பாறை மாவட்ட செயலாளரும் சிபாரிசு செய்ததையும் குறிப்பிட்டு நான் பூரண திருப்தியையும், மன நிறைவையும் அடைகிறேன் என்றார். மேலும் இத்திட்டம் கிடைக்கப்பெறுவதற்கு ஸ்தாபகத் தலைவரான ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.இல்யாஸ், ஸ்தாபக பிரதித்தலைவரான ஓய்வு பெற்ற உதவி விவசாயப் பணிப்பாளரான ஏ.எல்.முஹம்மட் பரீட் ஆகியோர்  இணைந்து இரவு பகல் என்று பாராமல் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கெல்லாம் சென்று பல சவால்களுக்கும் மத்தியில் தேவையான அனைத்து ஆவணங்களையெல்லாம் பெற்றுக்கொள்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாட்டிற்கு இன்றைய நிகழ்வு ஒரு சான்றாகும்.

அது மட்டுமல்ல பிரதிப்பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் விவசாயப் பிரதிநிதிகள்; மற்றும் விவசாயிகள் என பல தரப்பட்டவர்கள் இவ்வமைப்புடன் இணைந்து கொண்டு மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதும் இதன் வெற்றிக்கு காரணமாகும். எனவே எதிர்காலத்தில் மாகாண மட்டத்திலே முதல் தரமானதும், ஏனைய அமைப்புக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டான அமைப்பாகவும் மிளிர வேண்டுமென வாழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பேராதனை விவசாய திணைக்கள விதை அத்தாட்சிப் பிரிவு பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.எம்.ஆர். அபேகோண் இவ்வமைப்பினால் 2022 சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விதைப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிய விதைநெல் மாதிரிகள் அனைத்தும் பரிசோதனைக்குட்படுத்தி 100% ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக முடிவுகள் வந்துள்ளன. இம்முடிவு மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும். மட்டுமல்ல இவ்வமைப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெற்கள் யாவும் விவசாயத்திணைக்களத்தால் உற்பத்தி செய்யப்படும் பதிவுசெய்யப்பட்ட விதை நெல்லின் தரத்திற்கொப்பானவையாகக் காணப்படுகின்றன. இச்சம்பவங்கள் எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அந்த வகையில் இவ்வமைப்பை பாராட்டாமலிருக்க முடியாது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல அபிவிருத்தி அதிகாரிகள், நீர் பாசனப் பொறியியலாளர், விவசாயப் பிரதிநிதிகள், விற்பனை முகவர்கள், மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் இவ்வமைப்பு 2004ம் ஆண்டு 12 அங்கத்தவர்களுடன் விவசாயத்திணைக்களத்தின் தானியக்களஞ்சிய அபிவிருத்தித்திட்டத்தில் ஓய்வு பெற்ற உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.பரீட் இந் அனுசரணையுடன் எக்றோ குறூப் என்ற பெயரில் இணைந்து கொண்டது. அன்று தொட்டு விவசாயத்திணைக்களத்தினால் முன்வைக்கும் சகல விவசாய அபிவிருத்தித்திட்டங்களிலும் பங்குகொண்டு, திறம்பட நடைமுறைப்படுத்தி நல்ல பலாபலன்களையும் அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டு வந்தது.

திட்டங்களாக:-
1. கூட்டெரு உற்பத்தியும் பாவனையும்.
2. மண்வள மேம்பாட்டுத்திட்டம்.  
3. போகங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தானியப் பயிர்ச்செய்கை.
4. ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவத்திட்டம்.
5. பாரம்பரிய நெல் உற்பத்தித்திட்டம்.  
6. ஒருங்கிணைந்த களை முகாமைத்துவ திட்டம்.  

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் இரண்டு போகமும் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்குப் போதுமான அளவு விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் பல காலம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓய்வு பெற்ற உதவி விவசாயப்பணிப்பாளர் பரீட் அவர்களினதும் மற்றும் ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகஸ்தர் இல்யாஸ் அவர்களினதும் சிந்தனைக்கமைவாக மேற்படி அமைப்பிற்கு மேலும் சிறந்த சில அங்கத்தவர்களையும் இணைத்துக்கொண்டு ஒற்றுமையுடன் மேற்படி திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தனர். 2014 யில் இத்திட்டம் நிறைவேறி இன்று 12வது போகத்திற்கான இந்நிகழ்வில் இவ்வமைப்பு கலந்து கொண்டிருப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

இதனடிப்படையில் இதுவரைக்கும் சுமார் 50,000 புசல்  அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெல் உற்பத்திசெய்து இங்குமட்டுமல்ல வெளிமாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் சராசாரி ஒரு போகத்தில் 5000 புசல் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் விவசாயிகளின் விதைநெல் சுமார் 20,000 புசல் நெல் சுத்திகரிப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வமைப்பு பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கின்றது.

தரமான மற்றும் தூய விதைநெல் பாவனையால் கிடைக்கும் அனுகூலங்களையும் மற்றும் அத்தாட்ச்சிப்படுத்தப்படும் விதை நெல்லுக்கான குணாதிசயங்களையும் நன்கு அறிந்த இவ்வமைப்பினர் விதைநெல் உற்பத்தியில் மிகவும் நேர்த்தியாகவும் மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வமைப்பினர் கூட்டெரு தயாரிப்பிலும், பாரம்பரிய நெல் உற்பத்திலயிலும் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவு விவசாயிகள் மத்தியில் இவ்வாறானதொரு விதை (நெல் மற்றும் தானிய வகை) சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இல்லை என்ற குறைபாட்டுக்கு இந்த நிகழ்வு மூலம் எக்ரோ குறூப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.






SHARE

Author: verified_user

0 Comments: