16 May 2022

இலங்கை அரசிடம் தமிழர்கள் எந்த நீதி நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது - அருட்பணி ஜெகதாஸ்.

SHARE

இலங்கை அரசிடம் தமிழர்கள் எந்த நீதி நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது - அருட்பணி ஜெகதாஸ்.

இலங்கை அரசிடம் தமிழர்கள் எந்த நீதி நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இது கடந்த 75 ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை நாங்கள் நீதி கேட்டு நிற்பது சர்வதேசத்திடம்தான். என அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.

பொத்துவில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான பயணத்தின் மே18 இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்  ஞாயிற்றுக்கிழமை(15) மாலை களுவாஞ்சிகுடியை வந்தடைந்தது. இதன்போது அக்குழுவால் வீதியில் சென்ற மக்களுக்கு கஞ்சி வழங்கி, இன விடுதலையாளர்களைக் கைது செய், மகிந்த ராஜபக்சவை கைது செய், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய், சர்வதேசமே எமக்கு நீதியைப் பெற்றுத்தா, என கோசமிட்டனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் வைத்து அரசு செய்த இனப்படுகொலைக்காக நாம் பொத்துவில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் நீதி வேண்டி நடைபவனியாகச் செல்கின்றோம். நாங்கள் இனப்படுகொலைக்காக 13 வருடங்களாக நீதிகேட்டோம், வலிந்து காணாமலாக்கப்பட்வர்கள் எங்கே என்று நாம் நீதி கேட்டோம், கையளிக்கப்பட்டவர்கள் எங்கே என்று நீதிகேட்டோம், எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.

தொடற்சியாக அரசு 13 வருடகாலமாக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தமிழர் தாயகத்தில் நிறைவேற்றி வந்தது. எனவே வருகின்ற புதன்கிழமை(18) தமிழின அழிப்பு நாளாக இருக்கின்றது. கடந்த 12 ஆம் திகதி தமிழின அழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு அந்த வாரத்தின 4 வது நாளில் எமது பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுதான் இனப்படுகொலையைச் செய்தது அந்த இனப்படு கொலையாளிகள்தான் தற்போதும் அரசாங்கமாக இருக்கின்றார்கள். ஆகவே இலங்கை அரசிடம் தமிழர்கள் எந்த நீதி நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இது கடந்த 75 ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை நாங்கள் நீதி கேட்டு நிற்பது சர்வதேசத்திடம்தான். இனப்படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகிய அந்தக் கொம்பனி சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டு இனப்படுகொலைக்கான நீதி வெளிப்படல் வேண்டும். அதுதான் எங்களத ஒரே கோரிக்கை. என அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: