19 Dec 2021

பெறுமதிசேர் உணவுப் பதார்த்தங்கள் ஆரோக்கியமான உணவு திட்டம் அமுலாக்கம்.

SHARE

பெறுமதிசேர் உணவுப் பதார்த்தங்கள் ஆரோக்கியமான உணவு திட்டம் அமுலாக்கம்.

விவசாயத் திணைக்களத்தின்பெறுமதிசேர் உணவுப் பதார்த்தங்கள் ஆரோக்கியமான உணவுஎனும் இந்த வேலைத் திட்டம் எம்மை  ஆரோக்கியமுள்ளவர்களாக மாற்ற உதவும் என மட்டக்களப்பு பெண்கள் விவசாய விரிவாக்க பாடவிதான உத்தியோகத்தர் குந்தவை ரவிசங்கர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் வியாழக்கிழமை 16.12.2021 இடம் பெற்றபெறுமதிசேர் உணவுப் பதார்த்தங்கள் ஆரோக்கியமான உணவுஎனும் பயிற்சி வழங்கல் ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் வீட்டுத்தோட்ட கமக்காரர் மகளிர் சங்கத்தைச் சேர்ந்த மகளிர் விவசாயிகளுக்கு இடம்பெற்றது.

ஆரோக்கியமான உணவுகள் தயாரிக்கும் செய்முறைப் பயிற்சிகள் இங்கு இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பெண்கள் விவசாய விரிவாக்க பாடவிதான உத்தியோகத்தர் குந்தவை

உள்ளுரில் நிலக்கடலை குரக்கன் கௌபி உழுந்து பயறு தானியங்கள் பருப்பு வகைகள் பழங்கள் மரக்கறிகள் உள்ளிட்ட எத்தனையோ வகையான விவசாய உற்பத்திப் பொருட்கள் கிடைக்கின்றன. அவை சத்துக்கள் நிறைந்த உப உணவுகளாகும்.

ஆனால் கவர்ச்சி காரணமாக சில வேளை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருட்களை வாங்கி உணவுகளைத் தயார் செய்கின்றோம்.

அவற்றை விட இரசாயனம் கலக்காத இயற்கை முறையிலமைந்த உள்ளுர் விவசாய உற்பத்திகள் நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியத்திற்கு உதவுபவை.

ஆகையினால்தான் நமது இளம் பராயத்தினருக்கு  நஞ்சு கலக்காத இயற்கை விவசாய முறையிலமைந்த நமது பாரம்பரிய  உள்ளுர் விவசாய விளைபொருட்களைக் கொண்டு உணவூட்ட வேண்டும்.

சிறந்த உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய பயிற்சிகள் கிராமம் தோறும் மக்களின் காலடிக்குச் சென்று வழங்கப்படுகின்றது.

பாரம்பரிய வகையில் உற்பத்தியான உப உணவுகளைக்கொண்டு போஷாக்கான உணவுகளைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளை நாம் வழங்கி வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இத்தகைய 15 செய்முறைப் பயிற்சிகளில் கலந்து கொண்டு விவசாயப் பெண்கள் சுமார் 300  பேர் பயனடைந்திருக்கின்றார்கள்.

போஷாக்கான உணவுகளை உட்கொள்ளாததன் காரணமாக ஏதாவதொரு தொற்றாநோய்க்கு இலக்காகக் கூடிய சூழலுக்குள் தற்போதைய இளஞ் சமுதாயம் அகப்பட்டுள்ளது.

எனவே நச்சுச் சூழலை மாற்றுவதற்காகவும் சிறந்த உணவுப் பழக்கவழக்கத்தைக் கைக் கொள்வதற்காகவும் இரசாயனம் கலந்த உணவுகளைத் தவிர்ப்பிதற்காகவும் நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.”என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு அலுவலர் எம்.சி.எம். றியாழ் பயிலுநர் எஸ். சுவர்னேஸ் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையிலுள்ள 10121 அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 4.1 மில்லியன் மாணவர்களில் 20.6 வீதம் பேர் நிறை குறைந்தவர்களாகவும் 7.09 வீதமான மாணவர்கள் குட்டையர்களாகவும் 2.04 வீதமானோர் மேலதிக நிறை கொண்டவர்களாகவும் காணப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள திட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.           













            

SHARE

Author: verified_user

0 Comments: