19 May 2021

பொதுமக்கள் எவரும் எக்காரணம் கொண்டும் ஆலய வளாகத்தினுள் வர அனுமதிக்காமல் நடைபெறவுள்ள செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் – 2021

SHARE


கிழக்கிலங்கையின் தனிச்சிறப்பு பெற்ற ஆலயமான மட்டக்களப்பு - செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் சடங்கு உற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.05.2021) கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வழமைபோல் சடங்குகள் பின்வரும் ஒழுங்கில் நடைபெற்று, எதிர்வரும் திங்கட்கிழமை (24.05.2021) பின்னிரவு திருக்குளிர்த்தியுடன் இன்தே நிறைவு பெறவுள்ளதாக மேற்படி ஆலய நிருவாகம் தெரிவித்துள்ளது.மேலும் நாட்டில் தற்போது கொரோணாத் தொற்று நிலைமை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் மக்களின் பாதுகாப்புக் கருதி இச்சமயம் சடங்கை மாத்திரம் சம்பிரதாய முறைப்படி நடாத்த கண்ணகை அம்மன் திருவருள் கூடியுள்ளது.

சடங்குகால கிரியை நிகழ்வுகள்.

வெள்ளிக்கிழமை(21.05.2021) முன்இரவு கதவு திறத்தல் கிரான்குளம் கிராம மக்கள், சனிக்கிழமை(22.05.2021)பகற் சடங்கு குருக்கள்மடம் கிராம மக்கள், சனிக்கிழமை (22.05.2021) இரவுச் சடங்கு மாங்காடு கிராம மக்கள், ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) பகற் சடங்கு தேத்தாத்தீவு கிராம மக்கள்,ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) இரவுச் சடங்கு செட்டிபாளையம் கிராம மக்கள் திங்கட்கிழமை (24.05.2021)பகற் சடங்கு களுதாவளை கிராம மக்கள் 

திங்கட்கிழமை (24.05.2021) பின்னிரவு திருக்குளிர்த்திச் சடங்கு களுதாவளை கிராம மக்கள் ஆகிய ஒழுங்கில் நடைபெறவுள்ளது.

இதன் படி கொவிட் - 19 தடுப்பு பிரிவினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இச்சடங்கை நடாத்துவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் பக்தர்களின் கவனத்திற்கு ஆலய நிருவாகம் மேலும் அறிவித்துள்ளது.

அம்மன் சடங்கு காலப்பகுதியில் பொதுமக்கள் எவரும் எக்காரணம் கொண்டும் ஆலய வளாகத்தினுள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பக்தர்களின் நன்மை கருதி பகல் இரவுச் சடங்குகள் சமூக வலைத்தளங்கள் மூலம் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் உரிய ஆசாரங்களைப் பேணி வீட்டிலிருந்தவாறே வழிபாடுகளை மேற்கொள்வதுடன் இக் கொடிய கொரோனா நோயிலிருந்து அனைவரும் விடுபட பிரார்த்திக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.

இம்முறை ஆலயக் கதவு திறந்த பின்னர் எவ்விதமான நேர்கடன்களோ, பூஜைப் பொருட்களோ ஆலயத்தினால் பெற்றுக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுன.

இந்த நாட்களில் அங்கப் பிரதட்சனை, கற்பூர விளக்கு எடுத்தல், போன்ற எந்தவித செயற்பாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

ஆலய சடங்கு உற்சவ காலப்பகுதியில் ஆலய வளாகத்தினுள் அல்லது அதன் சூழலில் கடைகள் வைப்பது, ஒன்று கூடுவது, யாசகம் பெறுதல், அன்னதானம் வழங்குதல் போன்றன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்நிபந்தனைகளை மீறுவோர் மீது தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தொடர்பான சட்டவிதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம், என்பதுடன் அன்னையின் சடங்கு நிறுத்தப்பட்டு ஆலயம் பூட்டப்படுவதற்கான காரணமாகவும் அமையலாம்.

எனவே இவ்வருட அம்மன் சடங்கினை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரின் மேற்பார்வையோடு நடத்த பொதுமக்களின் பூரண ஒத்துளைப்புக்களை வழங்குமாறு இறையன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கமைய செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: