6 Oct 2020

கட்டுரை : உலக ஆசிரியர் திகம் இன்று (ஒக்டோபர் - 06)

SHARE

(வ.சக்திவேல்) 

கட்டுரை : உலக ஆசிரியர் திகம் இன்று (ஒக்டோபர் - 06).

மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் முதுமொழி வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு அது சாட்சியம் அளிக்கின்றது எனலாம்.

அத்தகைய சிறப்பு மிக்க ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உலக ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரப்படுகின்றது.

மாணவர்களாக பாடசாலைகளுக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், கற்றல் என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களைப் பட்டடை தீட்டி சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. ஏன்றால் அது மிகையாகாது. அவ்வாறானவர்களுக்க வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கிக்  கொண்டாடும் நாள்தான் இன்னாளாகும்.

“எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகும்” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவியர்களின் சமூகத்தின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். அது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; அதீத மகிழ்ச்சி தோன்றும்.

இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணாக்கனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற “ஆசிரியர்களை” கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.

ஒக்டோபர் 05 “உலக ஆசிரியர் தினம்” உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்பட்டு வந்தலும் இலங்கைளில் வருடம் தோறும் ஒக்டோபர் - 06 ஆம் திகதி ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி வரப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO அமைப்பு ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, “ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்” என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது. 

பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.

இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.

அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு “ஆசிரியர் தினம்” அவசியம் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தி நிற்கின்றது. எனலாம்.




SHARE

Author: verified_user

0 Comments: