30 Jul 2020

சம்பந்தன், குகதாசனின் பங்களிப்பு தமிழ் மக்களுக்கு அவசியம். !

SHARE
(ராஜ்)

சம்பந்தன்,  குகதாசனின் பங்களிப்பு தமிழ் மக்களுக்கு அவசியம். தமிழ் மக்களின் தீர்வுக்காக சம்பந்தன் ஐயாவின் பங்களிப்பு எவ்வளவு அவசியமோ அதேபோன்று திருகோணமலை மாவட்ட மக்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பவதற்கு குகதாசனின் பங்களிப்பு மிகவும் அவசியம் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியில் குரல்கொடுத்து வருகின்ற தேசிய அரசியல்வாதி என்றால் அவர் சம்பந்தன் ஐயாவாகத்தான் இருக்க முடியும். அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது. அதே நேரம் திருகோணமலை மாவட்டத்தில் 2018ம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திப் பணிகளுக்கும் குகதாசனுக்கும் பெரும் பங்குண்டு. இவரின் முயற்சியின் காரணமாக அரச நிதிகள் மட்டுமின்றி புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடனும் பரந்தளவிலான அபிவிருத்திப் பணிகள் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை மக்கள் அறிவார்கள்.

உலக அளவில் தொடர்புகளைக் கொண்டிருக்கும் குகதாசனின் பங்களிப்பு அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும் பயணிப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமாகும். இலங்கையில் இருக்கும்போது தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட்டதனால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக புலம்பெயர்ந்து அங்கும் மக்கள் பணியை மேற்கொண்டு உலக வாழ் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கின்ற குகதாசன் திருகோணமலைவாழ் தமிழ் மக்களுக்கான அரசியலில் தவிர்க்கப்பட முடியாத ஒருவர். இவரினால் சம்பந்தர் ஐயாவினுடைய நெறிப்படுத்தலின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 2217 மில்லியன் ரூபாவிற்கு மேல் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் பல்வேறு வகையான அபிவிருத்திகளையும், உதவிகளையும் இவர் பல வருடகாலமாக ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் சர்வதேச அரசியலை மேற்கொண்டுவரும் சம்பந்தர் ஐயாவுக்கு உதவியாக திருகோணமலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை முழுமையாக கவனிப்பதற்கு இன்னுமொருவரின் தேவை இருக்கின்றது அந்த இடத்தை குகதாசனினால் நிரப்ப முடியும் என எண்ணுகின்றேன் இது எமக்கு இருக்கின்ற வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சாத்தியமானது அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கும் விருப்பு இலக்கங்களான 1,3 ற்கும் ஏனையவர்களில் விரும்பிய ஒருவருக்கும் வாக்களித்து தமிழ் மக்களின் அரசியலில் தவிர்க்கப்பட முடியாதவர்களாக இருக்கின்ற சம்பந்தன் ஐயாவையும், குகதாசனையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தான் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: