29 Jul 2020

நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தன் ஜயாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.!

SHARE
(வ.ராஜ்)

நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தன் ஜயாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.அனைத்து மக்களும் ஒருகுடையின் கீழ் ஒன்றிணைந்து சம்பந்தன் ஐயாவை வெற்றிபெறச் செய்து மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என சமூக சேவையில் ஈடுபட்டுவருகின்ற கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தின் தலைவரும் தேசமானிய மற்றும் சமாதான நீதவானுமாகிய கந்தையா இராசநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கியுள்ள வேட்பாளரான சம்பந்தன் ஐயாவை எமது மக்கள் மீண்டும் வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். ஐயாவினுடைய அரசியல் முதிர்ச்சி, உலகளவிலான தொடர்பாடல், மும்மொழிப் புலமை, என்பன எமக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்கு மிக அவசியம் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் உலகநாடுகள் உன்னிப்பாக அவதானித்து வரும் நிலையில் அவர் பாராளுமன்றம் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். ஐயா அடிக்கடி கூறுவதுபோல் தன்னுடைய காலத்தில் எமது இனத்திற்கு ஒரு அரசியல் தீர்வை எடுத்துவிட வேண்டும் என்பதில் இன்றுவரைக்கும் தீர்மானமாகத்தான் இருக்கின்றார். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய போதும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எமக்கான தீர்வினை வழங்குவதில் கால இழுத்தடிப்பையே மேற்கொண்டு வந்தன. இந்த சூழ்நிலையில் ஐனநாயகத்தின் மூலம் அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய ஒரு தீர்வை எமக்கு எப்படியாவது பெற்றுக் கொடுத்து விடவேண்டும் என்ற நிலப்பாட்டில் ஐயா இன்னமும் அயராது உழைத்து வருவதையும், அதன் அடிப்படையில் இந்த அரசாங்கங்களை சர்வதேசத்தின் பொறிமுறைக்குள் கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான கைங்கரியத்தினை மேற்கொண்டு வருவதையும் அனைவரும் அறிவார்கள்.

நாம் அகிம்சையாக போராடினோம் அயுதம் கொண்டும் போராடினோம் அனைத்தையும் இழந்தோம் ஆனால் மீண்டும் அரசியல் என்ற சனநாயக வழியில் போராடுவோம் நிச்சயம் எமக்கு ஒரு நாள் இனமத பேதமின்றி அனைவரும் சம உரிமையுடன் வாழவழி பிறக்கும். நாம் என்றுமே எம் இனத்தையோ மற்ற இனத்தையோ வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஐயாவின் கரங்களை பலப்படுத்துவோம் எமக்கானதீர்வு ஒரு நாள் வந்தே தீரும். 

எமது மக்களுக்காக அரசியல் ரீதியாக போராடிய கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த தங்கத்துரை அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கு சம்பந்தர் ஐயா அனுப்பி வைத்திருந்த இரங்கல் செய்தியில் தான் தங்கத்துரையின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாகவும் அமரர். திருவாளர் தங்கத்தரை அவர்களுக்கும் மக்களுக்குமிடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு எப்பொழுதும் இருந்து வந்ததாகவும் மக்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் அவர் அதிக கவனம் செலுத்தி மக்களுக்காக கடுமையாக உழைத்தார் எனவும் அவரது அகால மரணம் தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும் எனவும் தெரிவித்து தங்கத்துரை அண்ணனை கௌரவப் படுத்தியதோடு மட்டுமல்லாது அவர் விட்டுச்சென்ற பணிகளை சம்பந்தர் ஐயா தொடர்ந்து வருகின்றார். எனவே எமது திருகோணமலை கொட்டியாபுரத்து உறவுகள் வீட்டுச் சின்னத்துக்கும் விருப்பு இலக்கமான 1ற்கும் தவறாது புள்ளடியிட்டு ஏனைய இரண்டு விருப்பு இலக்கங்களுக்கும் புள்ளடியிட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: