11 Feb 2020

தலைமைத்துவ பதவிக்கு ஆசைப்பட்டு விக்ணேஸ்வரன் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க போகின்றார். - ஸ்ரீநேசன் எம்.பி சாடல்.

SHARE
தலைமைத்துவ பதவிக்கு ஆசைப்பட்டு விக்ணேஸ்வரன் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க போகின்றார். - ஸ்ரீநேசன் எம்.பி சாடல். 
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தலைமைத்துவ பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு தனிக்கட்சியை உருவாக்கி, தெற்கில் உள்ள பேரினவாதிகள் விரும்புவது போன்று வாக்குகளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (10.02.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியளாலர்களின் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும் போதே இவ்வாறு கருத்து வெளியிட்டார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 

மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தினை மையப்படுத்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பினை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் உருவாக்கியுள்ளதாக அறிந்துள்ளோம். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்.

அதன் பின் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசை கொண்டவர். கடந்த கலங்களில் கூட மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தினைக் கையில் எடுத்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தார். இதன் ஊடாக அவர் ஒரு தலைவராக வர வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றார் என்பது தெளிவாகின்றது.

பொதுவாகவே விக்ணேஸ்வரன் அவர்கள் முன்னுக்குப் பின் முறனான கருத்துகளையே கூறிவருகின்றார். அவரது முதுமை அரசியல் சார்ந்த முதுமை அல்ல. பாராளுமன்றத்தில் வென்று எம்மோடு இணைந்து செயற்பட விரும்புகின்றார் என்றால், கொள்கையளவில் ஒத்துச் செல்லக் கூடிய கட்சியுடன் தலைமைப் பதவியின்றி அவரால் செயற்பட முடியாதா?  தேர்தலுக்கான கூட்டணி இல்லை என்று கூறுகின்றார், ஆனால் தேர்தலின் போதுதான் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, அந்த வேளையில் நான் ஓய்வுக்கு பின்னர் சிவ சிவா என்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது என்னை அரசியலில் கொண்டு நிறுத்தி சிக்கல்படுத்தி விட்டார்கள் என்று கூறினார்;. ஆனால் இப்போது அந்த அரசியலுக்கும் மேலாகச் சென்று ஒரு தனிக்கட்சியை உருவாக்கி தெற்கில் உள்ள பேரினவாதிகள் விரும்புவது போன்று வாக்குளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட வேண்டும், அவர்களுடைய கொள்கைகள் சின்னாபின்மாக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் பலமான சக்தியாக இருக்கக் கூடாது, ஒரே குரலில் அவர்களின் கருத்துகள் இருக்கக் கூடாது, தமிழ் அரசியல் வாதிகள் தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்து செயற்படுபவர்கள் தென்னிலங்கையில் உள்ள பேரினவாதிகள். இவ்வாறான பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற செயற்பாடகவே இது அமைந்துள்ளது.

சரணாகதி அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது செய்வதாக சி.வி.விக்ணேஸ்வரன் கூறியுள்ளார். கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடாவடித்தனங்களை கூட கடந்து குறிப்பாக எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சிவநேசன் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்கள் எனப் பலர் பழியாக்கப்பட்டும்கூட நாம் சரணாகதி அரசியலைச் செய்யவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் மாறி மாறி குழப்பங்களை ஏற்படுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் வரலாற்று ரீதியாக இணைந்து ஒன்றாக ஆட்சியினைச் செய்ய முன்வந்த போது அந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி எங்களின் தேசிய இனப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் யாப்பினை வரைகின்ற நிர்ணய சபையினை உருவாக்கினோம், இடைக்கால அறிக்கையினை உருவாக்கினோம், வழிநடத்தல் குழுவினை உருவாக்கினோம், உபகுழுக்களை உருவாக்கினோமே தவிர நாங்கள் சரணாகதி அரசியலுக்குச் செல்லவும் இல்லை, அமைச்சுப் பதவிகனைப் பெற்றுக் கொள்ளவும் இல்லை, அவர்களோடு இணைந்து பாரிய செயற்பாடுகளில் இணைந்து கொள்ளவம் இல்லை.

எனவே சி.வி.விக்ணேஸ்வரனுடைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும், மாகாண சபையில் செயற்பட்ட விதம் தொடர்பிலும் மக்கள் மிக அவதானமாக இருப்பார்கள். தற்கால அரசியல் நெருக்கடிக் காலத்தில் மிகக் கவனமாக தமது பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: