22 Dec 2019

மட்டக்களப்பில் தொடர்ந்து மழை போக்குவரத்து செய்வதில் சிரமம், தொற்றுக்கள் சந்தர்ப்பம்.

SHARE
மட்டக்களப்பில் தொடர்ந்து மழை போக்குவரத்து செய்வதில் சிரமம், தொற்றுக்கள் சந்தர்ப்பம். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழைவீழ்ச்சியினால் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள அனைத்து தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் வெல்லாவெளியிலிருந்து அம்பாறைக்குச் செல்லும் பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள வீதியின் வெல்லாவெளியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதியில் போக்குவரத்துச் செய்யும் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். வெள்ள நீர் பாயும் அவ்விடத்தில் மக்களை பாதுகாப்பான பணயத்தை மேற்கொள்வதற்காக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் உழவு இயந்திரம் மூலம் ஏற்றி இறக்க்கும் சேவை இடம்பெற்று வருகின்றது. இனால் மண்டூர், றாமடு, சங்கர்புரம், கணேசபுரம், தம்பலவத்தை, மற்றும் அம்பாறை மாவட்டத்திற்குச் செல்லும் மக்களும் பெரிதும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க அப்பிரதேசத்தின் மருதங்குடலை வீதி மற்றும், ஆனைகட்டியவெளி வீதி ஆகிய வீதிகளையும் ஊடறுத்து வெள்ளம் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்களும், பலத்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உறுகாமம், நவகிரி, உன்னிச்சை, கடுக்காமுனைக்குளம் அகிய பிரதான குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள், தெரிவிக்கின்றனர்.

எனினும் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பழுகாமத்துக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், கோவல்போரதீவுக் குளம், வெல்லாவெளிக்குளம், வட்டிக்குளம்,  பொறுகாமத்துக்குளம், தும்பங்கேணிக்குளம், மற்றும் மகிளுழூர், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருமண்வெளி, எழுவில், உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள சிறிய குளங்களும், முற்றாக நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது. 

பெய்துவரும் பலத்த மழையினால் கிராமங்களினுள் அமைந்துள்ள பெரும்பாலான உள்வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதனால் கிராமங்களுக்கிடையில் ஏற்படும் உள்ளுர் போக்குவரத்துக்கள் செய்வதிலும், மக்கள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தாழ்நிலங்களில் வெள்ள நீர் தேங்கிநிற்பதனால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும், தொற்றுக்கள் எற்படக்கூடிய சர்தர்ப்பம் ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




























SHARE

Author: verified_user

0 Comments: