26 Dec 2019

சுனாமி பற்றிய ஓர் பார்வை

SHARE
உலக வரலாற்றில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. இயற்கை அனர்த்தங்கள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள், சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புக்கள், கடும் மழை, வெள்ளம், கடும் வறட்சி.... இவ்வாறு இயற்கை அனர்த்தங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வகையில் ஆசிய பிராந்திய கடலோர மக்களுக்கு 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ‘சுனாமி'யாக வந்த இயற்கை அனர்த்தம் அழிக்க முடியாத கரைபடிந்த சுவட்டினைப் பதித்து விட்டது.கடந்த 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு கொண்டு செல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 6.58 மணிக்கு 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.

சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது.

சுனாமியின் அதிர்வில் குலுங்கிய இலங்கை

சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை. இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 516,150 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் சுமார் 119,562 கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்தன. வடக்கு-கிழக்கு உள்ளிட்ட கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான அழிவுகளை சந்தித்தன.

பாதிக்கப்பட்ட கடற்பரப்புகள்

இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை முதலில் தாக்கிய சுனாமி அலையினால் பெரிய நீலாவணையிலிருந்து பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன. திருக்கோவில் தம்பட்டை மற்றும் அக்பர் கிராமம் முழுமையாக அழிந்துள்ளன. 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக மக்களை கடல் காவு கொண்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சுமார் 4500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2975 பேரும், முல்லைத்தீவில் 2902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறிய போதிலும் பின்னர் இவை மாற்றம் ஏற்பட்டது. அதே சமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற ரயில், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் ரயில் கடலலையின் சீரற்றத்திற்கு இரையானது. இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1700 இற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இது ஆசியாவின் ரயில் விபத்துக்களில் முக்கியமானதாகவும் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து இறங்கிய இந்திய பீட பூமிகள்

2004 சுனாமி தாக்கத்தினால் சுமாத்திராவின் தென் மேற்குக் கரையிலுள்ள பல தீவுகள் தென்மேற்காக 20 மீற்றர் தூரம் நகர்ந்திருப்பதாகவும் இந்தோனேசியாவின் வடமேற்கு விளிம்பு தென்மேற்காக 30 மீற்றர் தூரம் வரை நகர்ந்திருப்பதாகவும் புவியியலாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமாத்திராதீவு கடல் மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பர்மா மற்றும் இந்திய பீட பூமிகள் கடல் மட்டத்திலிருந்து கீழ் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சுனாமி அலையின் வேகம்

சுனாமி அலையின் வேகம் உயர் நிலப்பரப்பை அணுகும் போது அதிகரிக்கின்றது. சுனாமி அலைகள் மணிக்கு 805 கிலோ மீற்றர் வேகத்தில் உட்செல்லக் கூடியதாகும். சுனாமி அலையானது ஒரு வினாடிக்கு இருநூறு தடவை சுழல்வதால் கடலுக்குள் இருந்து மணலையும் சேறு, பாசி போன்ற பொருட்களையும் காவிக்கொணடு நிலப் பகுதிக்குள் பிரவேசிக்கின்றது. எமது நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுமார் இருநூறு மீற்றருக்கும் அதிகமான தூரம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.

சுனாமி தாக்கியது முதல் முறையல்ல

தமிழகத்தை சுனாமி தாக்கியது இது முதல் முறையல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தாக்கியுள்ள அதேநேரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலும் பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தை கடல் கொள்ளையிட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதி பெரிய நிலப்பரப்பாக இருந்துள்ளது. இப்போதுள்ள இலங்கை, மாலைதீவு, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளெல்லாம் ஒன்றாக இணைந்திருந்த நாடுகளாகும். இந்த பெருநிலப்பரப்பை வெளிநாட்டவர் லெமூரியா என குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழர் இலக்கியத்தில் குமரிக் கண்டம் என குறிப்பிடுகின்றனர்.

துறைமுக அலைகள்

சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.) ‘ட்சு' சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு' என்றால் துறைமுகம், ‘னாமி' என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

அமைதியான சுனாமி

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பூகம்பங்களே காரணம்

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டால் மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.


மாபெரும் இயற்கை அனர்த்தம்

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது.

சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும் கூட, இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

SHARE

Author: verified_user

0 Comments: