21 Sept 2019

நாடளாவிய ரீதியில் பாரிய ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்திற்கு அழைப்பு

SHARE
நாடு பூராகவும் எதிர்வரும் திங்கட்கிழமை  சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின் வருமாறு தொழிற்சங்க போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு ரூபா.50,000.00 படி ஒன்றினை வழங்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை எதிர்வரும் 2019.09.24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வேளையில் அரச சேவையை சேர்ந்த ஏனைய 90 வீதமான அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தில் பாரிய முரண்பாடு இதனால் ஏற்படவுள்ளது.

இதனைக்கருத்திற் கொண்டு மேற்படி கொடுப்பனவின் ஒரு குறிப்பிட்ட வீதத்தினை ஏனைய சேவைகளை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்க கோரி எமது  அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் எதிர்வரும் 2019.09.23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இதனோடு இணைந்து இலங்கை நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை தொழில்நுட்ப சேவை மற்றும்  அபிவிருத்தி  உத்தியோகத்தர் சேவை என்பவற்றுடன் மேலும் 17 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களும் நாடளாவிய ரீதியில் பாரிய ஒரு நாள் சுகயீன விருமுறை தொழிற்சங்க போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.

எனவே எமது  தொழிற்சங்க போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 2019.09.23 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து சகலரும் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ. முபாறக் மற்றும்  செயலாளர் நாயகம் வ.பற்குணன் ஆகியோரது ஒப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: