காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியதால் முறுகல் நிலை ஏற்பட்டு அவ்விடத்தில் தற்சமயம் பாதுகாப்புக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையோரமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி எனுமிடத்தில் தனியார் காணியிலிருந்த அரச மரக் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் தனது மகளுககு வீடொன்றை அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை 23.10.2018 வெட்டியுள்ளார்.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்திலிருந்து மரக் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியை தன்வசம் வைத்துக் கொண்டு மரக்கிளைகளைக் களையும் வேலையைத் தொடங்கிய சற்று நேரத்தில் அங்கு திடீரென வந்து நின்ற பௌத்த துறவி மற்றும் பௌத்த மத ஆர்வலர்கள் “போதி” மரக் கிளைகளை களைவதை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இவ்வேளையில் சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு மேலும் முறுகல் நிலை ஏற்படாதிருக்க மரக்கிளைகள் வெட்டுவதை தற்போதைக்கு நிறுத்துமாறும் கேட்டுள்ளனர்.
இதற்கமைய தற்போதைக்கு மரக் கிளைகள் வெட்டும் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு அவ்விடத்தில் பொலிஸ் அணியொன்று பாதுகாப்புக் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சம்பவ இடத்தில் இராணுவ சோதனைச் சாவடியும், பின்னர் பொலிஸ் சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது.
அவ்வேளையில் அங்கிருந்த தனியார் காணிக்குள் புத்த சிலை நிறுவப்பட்டு அரச மரமும் நாட்டப்பட்டு அங்கு படையினராலும் பொலிஸாராலும் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றுவந்தன.
மேலும், அவ்விடத்தில் ஏற்கெனவே குடியிருந்த குடும்பங்கள் பாதுகாப்புக் காரணமாக பல வருட காலம் தமது குடியிருப்புக்களைக் காலி செய்து விட்டு அகன்று விட்டனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் சமீப சில வருடங்களுக்குள்ளாக அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு முகாமைச் சூழவிருந்த தனியார் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இவ்வேளையிலேயே காணிச் சொந்தக்காரர்கள் காணிகளைச் சுத்தம் செய்து தமது வாழ்விடங்களுக்கு தமது வசதிக் கேற்ப வீடுகளை அமைத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது மேற்படி அரச மரக்கிளை களையப்பட்டதால் முறுகல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment