30 Jun 2016

கோழிக் கடையில் பணம் திருடிய மூவரும் தலா ஐம்பதினாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி நகரப் பகுதியில் அமைந்திருக்கும் கோழி இறைச்சி விற்பனைக் கடையில் புகுந்து 15 ஆயிரம் ரூபா பணத்தைத்
திருடிய குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) கைது செய்யப்பட்ட மூவரும் தலா ஐம்பதினாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்ட நீதிவான் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று வழக்கு விசாரணை இடம்பெறும் என்றும் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரும் காளிகோயில் வீதி ஏறாவூர் 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த சேர்ந்த முறையே 22, 30, மற்றும் 36 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, செங்கலடியில் கோழி இறைச்சிக் கடை வைத்திருக்கும் மாரிமுத்து தங்கராஜா (வயது 58) என்பவரின் கடையில் இருந்த பணம் 15 ஆயிரம் ரூபாவை திங்கட்கிழமை மாலை (ஜுன் 27, 2016) மூவர் கடைக்குள் புகுந்து திருடிச் சென்றுள்ளனர்.

கோழிக்கடையின் பின்புறமாக தான் நின்று கொண்டு துப்புரவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது சடுதியாக கடைக்குள் நுழைந்த மூவர் கடைக்குள் பொலித்தீன் பையில் இடப்பட்டிருந்த பணத்தைத் திருடிக் கொண்டு ஓட்டம்பிடித்துள்ளனர்.

ஆட்களை துரத்திப் பிடிக்க முற்பட்டபோதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

திருடர்களை அடையாளம் கண்டு கொண்டதால் கடை உரிமையாளர் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கமையவும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த துப்புத் தகவலின் மூலமும்  பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்தனர். 

SHARE

Author: verified_user

0 Comments: