25 Aug 2015

மட்டக்களப்பில் 75 சிங்களவர்கள் கம நல ஆராச்சியாளர்களாக நியமனம்: பொன்.செல்வராசா கண்டணம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கமநலச்சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள 99 ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவை வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இன்று  காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கமச்சேவை திணைக்களம் நேற்று  வழங்கிய ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் விண்ணப்பம் கோரப்பட்டு இங்குள்ள இளைஞர் யுவதிகள் விண்ணப்பித்திருந்தனர். அது தொடர்பான நேர்முகப்பரீட்சை இரண்டு தடவைகள் ரத்துச்செய்யப்பட்டன.
இறுதியாக எழுத்துப்பரீட்சை ஒன்றின் மூலம் அந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99பேர் நியமனம் பெற்றுள்ளார்கள். இந்த நியமனத்தில் ஏறக்குறைய 75பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களாகவும் 20பேர் தமிழர்களாகவும் நான்கு பேர் முஸ்லிம்களாகவும் உள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 99வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும். இவர்கள் விவசாயம் தொடர்பில் ஆராய வேண்டியதாக இந்த நியமனதாரிகள் செயற்படவேண்டும்.
இந்த பெரும்பான்மையின உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இவர்கள் விவசாயிகளுடன் கதைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.
எனவே புதிதாக நியமிக்கப்பட்ட பெரும்பான்மை உத்தியோகத்தர்களை சிங்கள பகுதிகளுக்கு அனுப்பிவிட்டு தமிழ் பேசுபவர்களை நியமிக்க வேண்டும். இதேபோன்றே ஒரு வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு 21பெரும்பான்மையின சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தவேளையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அவர்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனினும் அவர்களை வாபஸ்பெறாத காரணத்தினால் உடனடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை தொடர்புகொண்டு மாவட்ட செயலகத்துக்கு நியமனம்பெற்றவர்களை வேறு பகுதிக்களுக்கு அனுப்பிவைத்தேன்.
அதேபோன்று இந்த நிலைமை இன்று தோன்றியுள்ளது. இவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். இவர்கள் இங்கு கடமையாற்றுவதனால் எந்தவித நன்மையும் இல்லை.
உடனடியாக அரசாங்கம் இதில் தலையிட்டு குறித்த 75பேரையும் வாபஸ்பெற வேண்டும். போட்டிப்பரீட்சையில் தமிழர்கள் குறைவான புள்ளிகளைப்பெற்றிருந்தால் வெட்டுப்புள்ளிகளை குறைத்து தமிழ் பேசுபவர்களை நியமிக்க வேண்டும் என அரசாங்கத்தினை கோரவிரும்புகின்றேன்
SHARE

Author: verified_user

0 Comments: