11 Jul 2021

நலிவடைந்த குடும்பங்களுக்காக சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவை நிறுவனத்தினால் உலருணவு நிவாரண உதவி

SHARE

கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கிப்போன நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவடைந்த குடும்பங்களுக்காக சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவை நிறுவனத்தினால்  உலருணவு நிவாரண உதவி.

கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கிப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நலிவடைந்த குடும்பங்களுக்காக மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் நரிப்புல்தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவை நிறுவனத்தின் நிதி ஆதரவில் வெளிச்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஊடாக இவ்வுதவிகள் சனிக்கிழமை(10) வழங்கி வைக்கப்பட்டன.

மகிழவெட்டுவான் கிராம உத்தியோகத்தர் ரீ. தயாநிதி மகிழவெட்டுவான் கரவெட்டி சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர் புவனேஸ்வரி ஜெயசீலன் உள்ளிட்பட தன்னார்வலர்களுமாக இந்நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய அரிசி கோதுமை மாவு சீனி உள்ளிட்ட 9 உலருணவுகள் அடங்கிய பொதிகள் தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற 120 பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

பயணத்தடை கொரோனா வைரஸ் பரவல் அச்சம் தொழிலிழப்பு வாழ்வாதாரப் பாதிப்பு உள்ளிட்ட இந்த இக்கட்டான நெருக்கடி மிக்க கால கட்டத்தில் தமது காலடி தேடி வந்து இவ்வுலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை தமக்கு பேருதவியாக அமைந்திருந்ததாக உதவிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிக் குடும்பங்களின் அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவை நிறுவனம் சுயதொழில் உதவிகள் மருத்துவ உதவிகள்  பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கரவண்டிகள் ஆகியவற்றை வழங்கல்  சிறுவர் காப்பக மேம்பாடுகள் இடர்கால நிவாரண விநியோகம்  போன்ற மேலும் பல உதவிகளை மக்களுக்காக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றது.







 

SHARE

Author: verified_user

0 Comments: