சுகாதார அதிகாரியை அச்சுறுத்திய நபரைக் கைது செய்யக் கோரி மட்டு.மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பு-பீசீஆர் அன்டிஜன் முற்றாக பாதிப்பு.
மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செவ்வாய்கிழமை(01) முதல் கொரோனா செயற்பாடுளில் விலகியிருந்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தின் எப்பகுதியிலும் செவ்வாய்கிழமை(01) பீசீஆர் மற்றும் அன்டிஜன் எடுக்கும் நடவடிக்கைகள் உட்பட எவ்வித கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
ஞாயிற்றுக்கிழமை(30) மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார பிரிவில் கடமைபுரியும் கந்தசாமி ஜெய்சங்கர் என்ற பொதுச் சுகாதார பரிசோதகரை தொலைபேசி மூலம்கடுமையாக அச்சுறுத்திய நபரைக் கைது செய்யுமாறு கோரியே மேற்படி பணி பகிஸ்கரிப்பு இடம் பெறுவதாக அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களபபு மாவட்ட தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.
குறித்த தொலைபேசியில் அச்சுறுத்திய நபர் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில்
சம்பந்தப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் முறைப்பாடு செய்திருந்தும் இதுவரை அவரைக் கைது
செய்யவில்லையென பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். மேற்படி நபர் கைது செய்யப்படும்
வரை எமது பணி பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தமது அலுவலகங்களுக்கு வருகை தந்திருந்த போதிலும் கொரோனா
தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில்
14 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும் 72 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment