19 Jun 2019

பொசன் நிகழ்வுக்கு சென்று திரும்பியோர் விபத்தில் சிக்கியதில் ஐவர் பலி 12 பேர் படு காயம்

SHARE
திம்புலாகலை விஹாரையில் இடம்பெற்ற பொசன் பௌர்ணமி நிகழ்வில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோர் வீதி விபத்தில் சிக்கியதில் ஐவர் பலியானதாகவும் 12 பேர் படுகாயங்களுக்குள்ளானதாகவும் வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து மட்டக்களப்பு – கொழும்பு வீதி, செவனப்பிட்டி, ஆச்சிமதகு (ஆச்சி போக்கடி) எனுமிடத்தில் புதன்கிழமை அதிகாலை 2 மணிளவில் இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றும் உழவு இயந்திரமும் மோதிக் கொண்டதில் உழவு இயந்திரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நான்கு பெண்களும் ஒரு ஆணுமாக மொத்தம் ஐவர் பலியாகியுள்ளனர்.

வேனில் வந்தவர்களில் சிலரும் உழவு இயந்திரத்தில் வந்தவர்களில் சிலருமாக மொத்தம் 12 பேர் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் முன்னதாக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலொன்னறுவை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் மூவர் இறந்ததோடு மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

பொறவை, போவத்த, திவுலடன் கடவ ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த புஷ்பகுமார (வயது 32) அனோமா குமாரி (வயது 38) சஞ்ஜீவனி (வயது 30) சேபாலிகா (வயது 30) சகுந்தலா (வயது 32) ஆகியோரே உயிரிழந்தோரவர்.

சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேனை அதிவேகமாகச் செலுத்திச் சென்ற சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: