காத்தான்குடி கடற்கரையோரமெங்கும் கரையொதுங்கிய வாவித் தாவரக் கழிவுகள் அகற்றுவது காத்தான்குடி நகர சபைக்கு மேலதிக வேலைப்பளுவாகவும் சவாலாகவும் அமைந்து விட்டதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 தெரிவித்தார்.
எவ்வாறேனும் இந்தக் கடின பணியை நாளாந்த திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ பணியணியினர் செவ்வனே செய்து முடித்திருப்பதாக அவ்ர மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய வெள்ளத்திற்குப் பின்னர், மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையோரமெங்கும் மட்டக்களப்பு வாவியிலிருந்து கடலை நோக்கி அள்ளுண்டு சென்ற வாவித் தாவரக் கழிவுகள் பெருமளவில் கரையொதுங்கியிருந்தன.
பல கிலோமீற்றர்கள் பரப்பில் இந்தத் தாவரக் கழிவுகள் கடற்கரை நெடுகிலும் ஒதுங்கியிருந்தன.
சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்ததால் முகத்துவாரம் திறக்கப்பட்டு வாவி வெள்ள நீர் கடலுக்குள் கரைபுரண்டோட வழியேற்படுத்தப்பட்டது.
இவ்வேளையிலேயே இந்த வாவித் தாவரங்களும் வாவி வெள்ள நீரோடு அள்ளுண்டு கடலுக்குள் சென்று அவை மீண்டும் கடல் அலையால் கரைக்குக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களும் கரையோர சமுதாய மக்களும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக கரையொதுங்கிக் கொண்டிருக்கும் இந்த வாவித் தாவரங்களால் கடல் மீன் பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, காத்தான்குடி கடற்கரையைத் தமது பொழுதுபோக்கிற்காகவும் உல்லாசத்திற்காகவும் களிக்க வருவோர் இந்த வாவித் தாவரங்களின் கரையோர ஆக்கிரமிப்பால் கடற்கரையைப் பயன்படுத்த முடியாதிருந்ததாக தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment