19 Apr 2016

பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியவர் கைது

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் மீரா பெரிய ஜும்மாப் பள்ளி வாசல் (ஓட்டுப்பள்ளி) உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்திருப்பதாக ஏறாவூர்
பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பள்ளிவாசல் உண்டியல் முற்றாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிருவாக சபை பொருளாளர் ஏ.டி. அப்துல் றவூப் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் தாள்களும் நாணயங்களுமாக 1500 ரூபா அளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஏறாவூர் தாமோதரம் வீதியைச் சேர்ந்த 22 வயதான மைக்கல் றொஸாந்த் என்ற சந்தேக நபர் இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதி ஏறாவூர் குமாரவேலியார் கிராமத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடிக் கொண்டு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருபவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் உண்டியல் உடைப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  

SHARE

Author: verified_user

0 Comments: