மழை வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 560 குடும்பங்களைச் சேர்ந்த 1900 பேர் இடம்பெயர்ந்து பொதுக் கட்டடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், பொதுக் கட்டடங்களிலும் தங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (09) வரையில் 560 குடும்பங்களைச் சேர்ந்த 1900 பேர் இடம்பெயர்ந்து பொதுக் கட்டடகங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தட்டுமுனை மாணிக்க விநாயக வித்தியாலயத்தில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 544 பேரும், ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 333 பேரும், சின்னத்தட்டுமுனை பாலர் பாடசாலைக் கட்டடத்தில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 425 பேரும், வம்மிவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 457 பேரும், மாவடிஓடை தேவலாலய கட்டடத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நாசிவன்தீவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பிரம்படித்தீவு பெதுக்கட்டடத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.சி.ஏ.முகமட். றியாஸ் தெரிவித்தார்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பொது இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment