21 Jun 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 5 பிரதேச வைத்தியசாலைகள் புதிதாகத் திறக்கப்படும்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில்  புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 பிரதேச வைத்தியசாலைகள் இவ்வாண்டுக்குள் திறக்கப்பட்டு அங்கு மக்களுக்கான சுகாதார வைத்திய சேவைகள் இடம்பெறக் கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. முருகானந்தன் ; Provincial Health Director Dr. K.Murugananthan  தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சுகாதார சேவைகள் அபிவிருத்தி செயற்திட்டங்கள் சம்பந்தமாகக் கேட்டபோது அவர் இந்த விவரங்களை புதனன்று 20.06.2018 இதுபற்றி மேலும் தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் முருகானந்தன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வசதிகளை தொலை தூரத்திலிருந்து பெற்றுக் கொள்ளும்  தூரப்புறக் கிராம மக்களின் வசதிக்காக திக்கோடை, புலிபாய்ந்தகல், கோப்பாவெளி, பன்சேனை மற்றும் கூழாவடி ஆகிய இடங்களில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள பிரதேச வைத்தியசாலைகள் இவ்வாண்டுக்குள் மக்கள் பாவினைக்காக கையளிக்கப்படவுள்ளன.
மேலும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்குத் தேவையேற்படுமாயின் அதனைக் கருத்திற் கொண்டு அப்பிரதேச செயலகப் பிரிவில் மேலும் ஒரு வைத்தியசாலையை எதிர்வரும் காலங்களில் நிருமாணித்துக் கொள்ள முடியும்.
அதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லையாயின் அது தேவையற்ற வளப்பயன்பாடாகவும் பொருத்தமற்ற தேவைப்பாடாகவும் அமைந்து விடும்.
உதாரணத்திற்கு இரண்டு மாடிக் கட்டிடத்தையும் சகல வசதிகளையும் வைத்தியர் மற்றும் தாதியர்களையும் கொண்டமைந்த பழுகாமம் வைத்தியசாலை எது வித நோயாளிகளும் இன்றி பயன்பாடற்றுக் காணப்படுகின்றது.
அவ்வைத்தியசாலையின் கட்டிடத் தொகுதியின் மேல்மாடிப் பகுதி உட்பட பெரும்பாலான பகுதிகள் பாவிப்பாரற்றுக் கிடப்பதால் சிதிலமடையக் கூடிய நிலைமை தோன்றியுள்ளது.
எனவே, இவ்வாறு பொருத்தமற்ற பகுதிகளில் தேவைப்பாடில்லாத வகையில் வளங்கள் பயனற்றுப் போவதையிட்டும் கரிசனை கொள்ள வேண்டும்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: